இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி - பயிலரங்கு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி - பயிலரங்கு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பயிலரங்கு கூட்டம் 

திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொங்கு மண்டல பயிலரங்கு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு, கோவை வடக்கு, கோவை தெற்கு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொங்கு மண்டல கூட்டம் நேற்று திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையது முஸ்தபா தலைமை தாங்கி பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, தமிழ்நாடு அரசு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், இந்தியாவின் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசியத் தலைவர் பாத்திமா முசப்பர், மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர், தேசிய துணை தலைவர் (எம்.எஸ்.எப்.) முகமது அல் அமீன், நவாஸ் கனி எம்.பி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் மதத்தின் பெயரால் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவை கண்டிப்பது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற ஆதரவளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து திமுகவோடு கூட்டணியில் தொடர்கிறது. திமுகவிற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்க்குமான உறவு என்பது கொள்கை ரீதியான உறவு. பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது சிறுபான்மையினரின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை இதயபூர்வமாக கேட்கக்கூடிய கட்சி திமுக. பாரதிய ஜனதா கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டி அதனை சர்வதேச அளவில் அரசியல் செய்ய விரும்புகிறது. ஆனால் அவர்களின் எண்ணம் பலிக்காது என்பதை நாட்டு நடப்புகள் நமக்கு உணர்த்தி கொண்டிருக்கின்றன. 1989ம் ஆண்டு மும்பை மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன்படிக்கை செய்த பாம்பே டிக்ளரேஷன் உடன்படிக்கையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியோடு எப்போதும் உடன்படுவதில்லை என்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.

பாபர் மசூதி சம்பவம் மட்டுமல்லாது தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் , நாட்டின் அரசியலமைப்பை பாழ்படுத்திக் கொண்டிருக்கிற பாஜக வோடு கூட்டணி வைப்பதில்லை என்று 1989ஆம் ஆண்டின் முடிவை இப்போதும் தொடர்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமல்லாது 25 கோடி இஸ்லாமிய மக்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது எதார்த்தமான உண்மை. இந்தியா கூட்டணி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார்.

Tags

Next Story