இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 57 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009 மே 31-ந் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்யாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆலோசித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 3 மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால், அதில் தாமதம் ஏற்படுவதால் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்படி சென்னை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்ட 750 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 57 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.

Tags

Next Story