மகாத்மா காந்தி முக்கியமா? மதுபான கடை முக்கியமா? பாஜக. கேள்வி

மகாத்மா காந்தி முக்கியமா? மதுபான கடை முக்கியமா? பாஜக. கேள்வி

ஏரல் காந்தி சிலை சந்திப்பு அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.


ஏரல் காந்தி சிலை சந்திப்பு அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஏரல் காந்தி சிலை சந்திப்பு அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாரதிய ஜனதா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் காந்தி சிலை சந்திப்பு அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு அரைகுறை ஆடைகளுடன் மதுபோதைக்கு அடிமையானவர்கள் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதால் சாலையில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மதுவிலக்கு கொள்கையையே உயிர்மூச்சாக கொண்ட மகாத்மா காந்தி திருவுருவச்சிலை அருகிலேயே மிதமிஞ்சிய போதையில் மது அருந்தியவர்கள் அவ்வப்போது சுயநினைவின்றி வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிவிட்டது. இதனால் இந்த காந்தி சிலை சந்திப்பில் பேருந்திற்காக காத்திருக்கும் ஏரல் சுற்று வட்டாரப் பகுதியைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவரும் அச்சத்துடனே பேருந்திற்காக காத்திருக்கும் அசாதாரண சூழ்நிலை அங்கே நிலவுகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு அடையாளமாக காந்தி சிலை டாஸ்மாக் கடை என்று கூறி அடையாளப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தகைய பெரும் சீரழிவை சமூகத்திற்கு விளைவிக்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வழியுறுத்தி கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏரல் பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் எங்கும் மது விலக்கு கொள்கையை உயிர் மூச்சாக கொண்ட உத்தமர் மகாத்மா காந்தி புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கும் மாவட்ட நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் மகாத்மா காந்தி முக்கியமா? அல்லது மதுபான கடை முக்கியமா? என்பதை உணர்ந்து வேறு இடத்திற்கு இந்த டாஸ்மாக் கடையை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஏரல் சுற்று வட்டாரப்பகுதி பொதுமக்களின் ஆதரவோடு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story