சுபமுகூர்த்த நாளையொட்டி மல்லிகைப்பூ விலை உயர்வு

சுபமுகூர்த்த நாளையொட்டி மல்லிகைப்பூ விலை உயர்வு

 சேலத்தில் சுபமுகூர்த்த நாளையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.500க்கு விற்பனையானது.

சேலத்தில் சுபமுகூர்த்த நாளையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.500க்கு விற்பனையானது.

சேலம் கடைவீதி பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி, கம்மாளப்பட்டி, பனமரத்துப்பட்டி, மன்னார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்களை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுபமுகூர்த்த நாளையொட்டி திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. பூ வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்தனர். இதனால் பூ மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.500-க்கும், ரூ.160-க்கு விற்ற சன்னமல்லி ரூ.240-க்கும் விற்பனையானது.

இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதாவது, காக்கட்டான் மற்றும் மலைக்காக்கட்டான் ஆகியவை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. சாதா சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், கலர் காக்கட்டான் ரூ.100-க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.30-க்கும், செவ்வரளி ரூ.80-க்கும், ஐ.செவ்வரளி ரூ.40-க்கும் விற்பனையானது. மாலை கட்டுவதற்கு பயன்படுத்த கூடிய நந்தியாவட்டம் கிலோ ரூ.230-க்கும், சின்ன நந்தியாவட்டம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Tags

Next Story