பள்ளி தேர்வு தேதியை மாற்ற ஜவாஹிருல்லா கோரிக்கை

பள்ளி தேர்வு தேதியை மாற்ற ஜவாஹிருல்லா கோரிக்கை

எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

ரம்ஜானை முன்னிட்டு பள்ளி தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10, 2024 அன்று அறிவியல் தேர்வும், ஏப்ரல் 12, 2024 அன்று சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11, 2024 அன்று ஈகைப் பெருநாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்துள்ள ஏப்ரல் 11 அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும் தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் சூழலில் ஏப்ரல் 10, 2024 அன்றும் ஏப்ரல் 12, 2024 அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

எனவே, ஏப்ரல் 10, 2024 மற்றும் ஏப்ரல் 12, 2024 அன்று நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story