நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம்

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம்
X

கவியரங்கம் 

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அரசு சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கவியரங்கத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கவிஞர் அறிவுமதி தலைமையில் கவிஞர்கள் கலாபிரியா, சல்மா ஒருங்கிணைப்பில் விழா தொடங்கியது. இதில் கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, இளங்கோகிருஷ்ணன், நேசமித்திரன், கபிலன், ரோஸ்லின், வித்தியா, தஞ்சை இனியன், சுசித்ரா மாறன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் இலக்கிய படைப்புகள், அவரின் சாதனைகள், அவர் தந்த திட்டங்களை கவிதையாக தந்தனர். பின்னர் கலைஞர் நூறு கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது . இதில் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது . முன்னதாக விழாவில் அமைச்சர் கயால்விழி செல்வராஜ் பேசுகையில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து பெற்று தந்த பெருமை கலைஞரைச் சேரும். எழுத்துக்களால் சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர், அவரது கையெழுத்து சட்டமாக திட்டமாக வந்ததால் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது என கூறினார். தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு காரணம் கலைஞர். முன்மாதிரியான திட்டங்களை கொண்டுவந்து இந்தியாவிற்கே வழிகாட்டிய தலைவர். ஒரு மாநிலத்தின் கட்சிக்குதான் கலைஞர் தலைவர் என்றாலும் அகில இந்திய தலைவர்கள் அவரது வாய் அசைவை எதிர்பார்த்து இருப்பார்கள்.தமிழகம் மட்டும் அல்லாது இந்திய நாட்டுக்கே பாதுகாப்பாக இருந்து ஜனநாயகத்தை பாதுகாத்தவர் கலைஞர். இன்று திமுகவின் 6- வது முதல்வராக பொறுப்பேற்று பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என தெரிவித்தார். தலைமையுரை ஆற்றிப்பேசிய சபாநாயகர் அப்பாவு மனிதநாகரிகம் முதன் முதலில் தோன்றியது பொருநை ஆற்றில்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சி படுத்த நெல்லையில் 35 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்பாளிகள் பாதுகாப்பாக இருப்பதுடன் அவர்களுக்கு விருது,பொற்கிழி, என அரசால் கவுரவிக்கப்பட்டும் வருகிறார்கள். இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. இதற்கு கலைஞரின் பேனாதான் காரணம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன , முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், மாநில சட்ட திட்டக்குழு உறுப்பினர் சுப.சீத்தாராமன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஸ், மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story