காஞ்சிபுரம் : பட்டப்பகலில் வீட்டில் நகை திருட்டு
திருட்டு நடந்த வீடு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணாதெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார் . இவர் கட்டுமானப் பணியை செய்யும் மேஸ்திரி ஆக வேலை செய்து வருகிறார்.இவரின் வீட்டு அருகே வசிக்கும் மாமனார் ஏழுமலை என்பவர் வயோதிகம் காரணமாக இறந்து விட்டார். அவருக்கு ஈமக்காரியங்கள் செய்ய ரவிக்குமார், மனைவி சித்ரா, மகன் திருசங்கு, மகள் தமிழ்செல்வி, ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர்.
ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் பட்டப் பகலில் ரவிக்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவை உடைத்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பினர். தப்பி செல்வதற்கு முன்னதாக வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் களைத்துப் போட்டுவிட்டு மேலும் விலையுயர்ந்த பொருள்கள் ஏதாவது கிடைக்கின்றதா என தேடிப் பார்த்துள்ளனர் .
சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த மாகரல் காவல்துறையினர் மற்றும் காஞ்சிபுரம் டி.எஸ்.பி ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தினால் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.அவளூர் ஊராட்சியில் அதிகமான இளைஞர்கள் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் மதுபான பாட்டில்களையும் கள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதை தட்டிக் கேட்பவர்கள் தாக்கப்படுவதால் காவல்துறையினர் கூட இது சம்பந்தமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



