கார்த்திகை 1 : நாமக்கல் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை 1 : நாமக்கல் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்
சபரிமலைக்கு‌ மாலை அணிந்த பக்தர்கள்
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் தேதி அன்று ஐயப்ப பக்தர்கள் குருசாமியிடம் மாலை போட்டுக்கொண்டு, 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, பூஜைகள் செய்து, இருமுடி கட்டி, கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று, 18 படிகளை கடந்து ஐயப்ப சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி கார்த்திகை 1-ம் நாளான இன்று நாமக்கல் ஐயப்பன் கோவிலில் புதிய வேட்டி, துண்டுகளை அணிந்து கொண்டு, நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனமிட்டு, குருசாமியிடம் மண்டியிட்டு, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் மற்றும் வயதான பெண்கள் உள்ளிட்டோர் ஐயப்ப சரணம் கோஷமிட்டு வணங்கியபடி மாலை அணிந்தனர். முன்னதாக ஐயப்பனுக்கு மாலை அணிய தேவையான துளசி மாலை, படிகமாலை, நவரத்தின மாலை, வேஷ்டி துண்டுகள் உள்ளிட்ட பொருட்களை ஐயப்ப பக்தர்கள் வாங்கினர். நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து சென்றனர்.

Tags

Next Story