அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவர் கொலை: வெறிச்செயல்!

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவர் கொலை: வெறிச்செயல்!

கணவர் கொலை

ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த மனைவி மற்றும் மகன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். 
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஜெயராஜ் (67). தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வசந்தா என்ற மனைவியும் ரஜினிகாந்த் (43), சுரேஷ்குமார் (41) இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயராஜ் ஓய்வு பெற்றபோது வந்த 40 லட்சம் பணத்தை வைத்துக்கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டு வீட்டிற்கு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது மனைவி வசந்தாவையும் அடிக்கடி சந்தேகப்பட்டு துன்புறுத்துவதுடன் பணம் ஏதும் கொடுக்காமல் வீட்டிற்கு வராமல் வெளியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஜெயராஜ் வீட்டில் தூங்கி உள்ளார். அப்பொழுது ஜெயராஜ் மீது அவரது மனைவி வசந்தா அம்மிக்கல்லால் தாக்கியுள்ளார். மேலும், அவரது மகன் சுரேஷ்குமாரும் அம்மிக்கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயராஜ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து வசந்தா, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் உடனடியாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஜெயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தா மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story