நிலக்கரி ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம் - போலீசார் விசாரணை

நிலக்கரி ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம் - போலீசார் விசாரணை

நிலக்கரி ஏற்றி சென்ற லாரி விபத்து

நிலக்கரி ஏற்றி வந்த டாரஸ் லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் விபத்து

தூத்துக்குடியில் இருந்து சிவகாசி பேப்பர் மில்லுக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டு சென்றது. லாரியை மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கற்பகராஜா (30) ஓட்டிச் சென்றார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் துண்டாகியது.

விபத்தில் லாரியின் டீசல் டேங்க்கில் தீப்பொறி ஏற்பட்டு மளமளவென லாரியின் பிற பகுதிகளுக்கு தீ பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. பலத்த சத்தம் கேட்டு வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது சாலையின் நடுவில் லாரி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். லாரி ஓட்டுநர் கற்பகராஜா, கிளீனர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து கீழே குதித்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன். காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எட்டயபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து சாம்பலானது.விபத்து காரணமாக கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story