வரத்து அதிகரிப்பால் குறைந்த பூக்களின் விலை

வரத்து அதிகரிப்பால் குறைந்த பூக்களின் விலை

மல்லிகை 

கும்பகோணத்தில் பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-க்கும், முல்லை பூ ரூ.200க்கும் விற்பனையானது.

கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் இப்பகுதிகளில் உள்ள கடைகளில் பூ வாங்கி செல்கிறார்கள். திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது.

பனிக்காலங்களை விட வெயில் காலங்களால் பூக்கள் விளைச்சல் அதிகளவில் இருக்கும். இதனால் மற்ற காலங்களை விட வெயில் காலங்களில் பூக்கள் அதிகளவில் வரும். வெளியூர் பூக்கள் மட்டுமின்றி உள்ளூர் பூக்கள் அதிகளவில் விற்பைக்கு கொண்டு வரப்படுகிறது. கும்பகோணம் பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் கடந்த வாரம் 1 கிலோ மல்லிகை பூ ரூ.500-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று மல்லிகை பூ ரூ. 300-க்கு விற்பனையானது.

இதேபோல் முல்லை பூ ரூ.200-க்கும், பிச்சி பூ ரூ. 60-க்கும், அரளி பூ ரூ. 200-க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 100-க்கும், காக்கரட்டான் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், கோழிகொண்டை ரூ.40-க்கும், மருகொழுந்து கட்டு ரூ.50-க்கும் விற்பனையானது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லிகை பூவிற்கு மதுரை சிறப்பு போல் சுந்தரபெருமாள் கோவில் பகுதியும் சிறப்பு பெற்றது. பொதுவாக வெயில் காலங்களில் பூக்கள் நன்றாக பூக்கும். தற்போது பூக்கள் விளைச்சல் மற்றும் வரத்து அதிகளிவில் உள்ளது. இதனால் அதன்விலை குறைந்துள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் பூக்கள் விலை குறையும் என்றனர்.

Tags

Next Story