சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு
சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஹிமா கிருத்தி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில், சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சலவை தொழிலாளியின் மகன், சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். காஞ்சிபுரம் சேக்குபேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் சலவை தொழிலாளி. மனைவி மேகலா. தம்பதியருக்கு மீனாட்சி என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.
இதில், மீனாட்சிக்கு திருமணமாகிவிட்டது. மகன் பாலாஜி, 26; இவர் பள்ளிப் படிப்பை காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியிலும், சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கர் பல்கலையிலும் முடித்தார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், நான்கு ஆண்டுகளாக சென்னையில் சட்டப்பயிற்சி மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில், பாலாஜி தேர்வாகி உள்ளார்.
காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரவி. இவரது மனைவி விஜயா. அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் ஹிமா கிருத்தி, 23, இவர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், சட்ட படிப்பு முடித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில், ஹிமா கிருத்தி தேர்ச்சி பெற்றுள்ளார்.