நாமக்கல் அருகே வழக்கறிஞர் கொலை : உறவினர்கள் மறியல்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). வழக்கறிஞரான இவர் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முட்டாஞ்செட்டி பிரிவு அருகே இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற எருமப்பட்டி போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து உயிரிழந்த மணிகண்டனை கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி நேற்று நள்ளிரவில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து சக வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து நள்ளிரவு வரை நடத்தப்பட்ட சுமார் 2 மணி நேரம் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் வழக்கறிஞரின் உறவினர்கள் மோகனூர் - நாமக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்ந்து நாமக்கல் டிஎஸ்பி தன்ராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது...
