தொழிலாளி கொலை வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் சிறை

X
கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ஏசுவடியான் (67) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் (31 ), சதீஷ் குமார் (22) என்பவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெகன், சதீஷ் இருவரும் ஏசுவடியானின் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் வீட்டின் வெளியே இழுத்து வந்து கல்லால் தாக்கி கொலை செய்தனர். இது குறித்து ஏசுவடியான் மருமகள் விமலா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெகன், சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீனில் வந்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று காலை இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் அபராதமாக ரூபாய் 5 ஆயிரம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.மேலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக ஏழு வருடம் ஜெயில் தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை ஏகாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மதியழகன் ஆஜரானார்.
Next Story
