ராணிப்பேட்டையில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி-கலெக்டர் தகவல்
உதவி கலெக்டர்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரையும், குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.1½ லட்சம் வரையும், குழுவுக்கு ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான கடன் விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கடன் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, குடும்ப அட்டை, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின்,
இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியில் சமர்பிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.