பல்லடம் அருகே ஆன்லைனில் பணம் இழப்பு: பெண் உயிரிழப்பு

பல்லடம் அருகே ஆன்லைனில் பணம் இழப்பு: பெண் உயிரிழப்பு

உயிரிழந்தவர்கள்

பல்லடம் அருகே ஆன்லைன் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தில் குழந்தை இறந்த நிலையில், தாய் விஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் ( 36 ) இவரது மனைவி விஜி (30 ). இவர்களுக்கு வின்சிலின் என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 30ஆம் தேதி கரடிவாவி பேருந்து நிலையத்தில் இவர்கள் மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது குழந்தை வாந்தி எடுத்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் ராஜீவிடம் விசாரணை மேற்கொண்டனர் . காவல்துறையினரின் விசாரணையில் , கடந்த வாரம் சமூக வலைதளத்தில் கடன் கொடுப்பதாக வந்த லிங்கை ராஜீவ் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரை தொடர்பு கொண்ட நபர்கள் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவண செலவு இருப்பதாக கூறி தினந்தோறும் வெவ்வேறு எண்களில் தொடர்பு கொண்டு ஒவ்வொரு தவனையாக 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.

40 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜு தனது நண்பர்களிடம் கடனாக பெற்று ஆவண செலவுக்கு வழங்கி உள்ளார். ஆனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கூறியபடி லோன் பெற்று தரவில்லை. பிறகு அவரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜு மற்றும் விஜி எலி மருந்தை உட்கொண்டு குழந்தைக்கும் கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தை வின்சிலின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தது. ராஜீவ் மற்றும் விஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைபர் கிரைம் போலீசார் ராஜீவின் மொபைலை கைப்பற்றி அவரிடம் பணம் கேட்ட நபருடன் ராஜீவ் நடத்திய வாட்ஸ்அப் உரையாடல்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story