சாலையில் கிடந்த ரூ.13,400 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்

சாலையில் கிடந்த  ரூ.13,400 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்
X
பள்ளி மாணவர்களை பாராட்டிய போலீசார்
பள்ளி மாணவர்களின் செயலால் நெகிழ்ந்த காவல்துறையினர்

மதுரையில் சாலையில் கிடந்த ரூ.13400 பணத்தை எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு வெகுமதி அளித்து மாநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த நாஷர் என்பவரின் மகனான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அப்துல் ரஹ்மான் மற்றும் அதேபகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மகனான 7-ம் வகுப்பு மாணவன் வினித் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

எஸ்.எஸ். காலனி பகுதிக்கு செல்லும் வழியான மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள டீக் கடை அருகே சாலையில் ரூ.13,500 பணம் கீழே கிடப்பதை பார்த்துள்ளனர். அதை எடுத்த மாணவர்கள் பணத்தை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் உள்ள காவல்துறையினரிடம் கீழே கிடந்ததாக கூறி ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பணம் கீழே எடுக்கப்பட்ட பகுதிக்கு சென்ற எஸ்.எஸ்., காலனி காவல்துறையினர் அங்குள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி பணத்தை கீழே தவறவிட்ட தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த நவீன் என்பவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதனையடுத்து பணத்தை இழந்த நவீனிடம் பள்ளி மாணவர்களின் நேர்மை குறித்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பள்ளி மாணவர்களின் நல்லெண்ணத்தை பாராட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி இரு மாணவர்களையும் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மதுரையில் கீழே கிடந்த 13 ஆயிரத்தி 400 ரூபாய் பணத்தை இழந்தவருக்கு கிடைக்க வழிவகை செய்ததோடு, காவல் நிலையத்தில் மீதான எந்தவித அச்சமும் இன்றி நேரில் சென்று அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நேரடியாக சென்று பணத்தை காவல்துறையினரிடம் அளித்த பள்ளி மாணவர்களுடைய செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

Next Story