சிறுநீர் கழித்ததில் தகராறு - பனியன் நிறுவன தொழிலாளி அடித்து கொலை

சிறுநீர் கழித்ததில் தகராறு - பனியன் நிறுவன தொழிலாளி அடித்து கொலை

கொலை செய்யப்பட்டவர்

திருமுருகன்பூண்டி அருகே சிறுநீர் கழித்ததில் ஏற்பட்ட தகராற்றில் பனியன் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 16 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சேகர் (45). பனியன் தொழிலாளி. பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். நேற்று முன் தினம் இரவு திருக்குமரன் நகர் அபார்ட்மென்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அந்த பகுதியில் சேகர் சிறுநீர் கழிக்கவே, மது போதையில் இருந்த 3 பேரும் சேகரிடம் பிரச்சினை செய்துள்ளனர். 3 பேரும் சேர்ந்து சேகரை தாக்கி ஹெல்மெட்டால் கடுமையாக தாக்குவதை பார்த்த அப்பகுதியினர், சேகரின் மகன் தீனதயாளனுக்கு தகவல் அளித்தனர். அப்போது தீனதயாளன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது சவுகத் அலி, சக்திவேல் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தந்தை சேகரை ஹெல்மெட்டால் நெற்றி, தலைமீது தொடர்ந்து அடித்துள்ளனர்.

தொடர்ந்து அடித்ததால் சேகர் சுருண்டு கீழே விழுந்தார். அங்கு சென்ற மகன் தீனதயாளன் என் தந்தையை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சவே, எங்கள் முன்பே சாலையில் சிறுநீர் கழிக்கிறான் என சொல்லிவிட்டு அங்கிருந்து 3 பேரும் சென்றனர். ஆனால் தீனதயாளன் தந்தை சேகரை எழுப்பியபோது அவர் பேச்சு, மூச்சின்றி கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸூக்கு அழைத்து தகவல் அளித்துள்ளார். அங்கு வந்தவர்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து தீனதயாளன் அளித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீஸார் கொலை வழக்கு பதிந்து சவுகத் அலி(25), 16 வயது சிறுவனை கைது செய்தனர். இது தொடர்பாக வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பிரிவுகளின் போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவான சக்திவேலை (25) தேடி வருகின்றனர். சேகரின் சடலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Next Story