மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் பிள்ளைக்கறி அமுது படையல் விழா

மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில்  பிள்ளைக்கறி அமுது படையல் விழா

மாவால் செய்யப்பட்ட பிள்ளைக்கறி 

மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் நடந்த 194வது ஆண்டு பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 194வது ஆண்டாக பரணி நட்சத்திரத்தில் அமுது படையல் விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு உத்தராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடன விநாயகர் ஆலயத்தில் மாவால் செய்யப்பட்ட பிள்ளையை ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். வழி நெடுகிலும் பெண்கள் ஆசீர்வாதம் பெற்றனர். தொடர்ந்து கோயிலை மூன்று முறை சுற்றி வந்து மாவால் செய்யப்பட்ட பிள்ளையை உத்திராபதிசுவரர் பாதத்தில் வைத்து சுவாமிக்கு அமுது படையல் இட்டனர்.

பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மாவால் செய்யப்பட்ட பிள்ளைக்கறி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த பிள்ளைக்கறியை உண்ணும் பெண்கள் அடுத்த வருடம் குழந்தை பெருகிட்டும் என்பது கோயிலின் ஐதீகம் என்பதால் ஏராளமானோர் பிள்ளைக்கறி வாங்கி உண்டனர். இந்த அமுது படையல் விழாவில் நோயில்லா வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தராபதீஸ்வரரை தரிசனம் செய்து அமுது படையல் இட்ட உணவை பொறுமையுடன் காத்திருந்து வாங்கி உண்டனர்.

Tags

Next Story