112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18,59,450 மதிப்பில் நலத்திட்ட உதவியை அமைச்சர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி,மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு 112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18,59,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரை பெரம்பலூர் மாவட்டத்தில் 11,704 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,76,30,378 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். பின்னர், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலி, பீரோ போன்ற உபகரணங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் வழங்கினார்கள்.

இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா,வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story