அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் வட்டத்திற்குட்பட்ட கேம்பலாபாத், சேதுக்குவாய்த்தான் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், உணவு பொருள் ஏற்பாடு, தண்ணீர் விநியோகம், மின்சார விநியோகம், நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் கன மழை பெய்ததன் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அரசு சார்பில் வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துாத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அவர்களுக்கான அன்றாட தேவைகளை வழங்கும் வகையில், நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மழை வெள்ளத்தில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது. சாய்ந்த மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின் வயர்கள் சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் மருத்துவக் குழுவினர், பொதுமக்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். மழை வெள்ளத்தில் இறந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இழப்பு மற்றும் சேதமடைந்த வீடுகள், பொருட்கள் சேதம், பயிர் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கு எடுக்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேத மதிப்பீடு குறித்து கணக்கு எடுக்கும் பணி முடிவடைந்த பின்னர், உரிய நிவாணம் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, நிவாரண உதவி கோரி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்தார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், கேம்பலாபாத் பள்ளிவாசல், சேதுக்குவாய்த்தான் பள்ளிவாசல் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று திருமண வீட்டாரின் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொண்டார். இந்த ஆய்வின்போது, துறைசார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story