சாலை மேம்பாட்டு பணியால் வங்கிக்கு செல்வோர் தவிப்பு

சாலை மேம்பாட்டு பணியால் வங்கிக்கு செல்வோர் தவிப்பு

கோப்பு படம்

வங்கியின் முன்பு சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திவ் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பிரதான சாலைகள் அடைக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது. தற்போது பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.

பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட ஸ்டேட் பேங்க் வங்கி கிளை முன்பாக இதுநாள் வரையிலும் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் வங்கியின் உள்ளே சென்று வந்தனர். தற்பொழுது இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வாகனங்களின் உரிய இடத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்படுவதால் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சாலையின் வேறொரு பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டு வந்தாலும் போக்குவரத்து பாதிப்புஏற்படுகிறது. மேலும் இதனை ஒட்டி அருகிலேயே பல்வேறு தனியார் வங்கிகளும் இருப்பதால் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் உடனடியாக வங்கிகள் அதிகம் உள்ள சாலை பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story