காஞ்சியில் பள்ளத்தை மூடாத மாநகராட்சி:விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சியில் பள்ளத்தை மூடாத மாநகராட்சி:விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பள்ளத்தில் சிக்கிய கார்

காஞ்சியில் பள்ளத்தை மூடாத மாநகராட்சியின் அலட்சியத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதி வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க மூன்று மாதங்களுக்கு முன் மாநகராட்சி சார்பில், சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.

சீரமைப்பு பணி முடிந்தும் பள்ளத்தை மூடவில்லை. இதனால், சாலையோரம் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடந்த மாதம் இச்சாலையில் சென்ற இரு பாதசாரிகள் பள்ளத்தில் தவறி விழுந்தனர்.

அதேபோல, 3 டூ - வீலர்கள், 1 கார், பள்ளத்தில் சிக்கின. இதேபோல, நேற்று மாலை, இவ்வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன், சாலையோர பள்ளத்தை மூடி, சாலையை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story