முசிறி- நாமக்கல் சாலை அகலப்படுத்தும் பணி : ஆட்சியர் உமா ஆய்வு

ரூ.104.54 கோடி மதிப்பீட்டில் முசிறி நாமக்கல் சாலையில் இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், என்.புதுப்பட்டியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) சார்பில், ரூ.104.54 கோடி மதிப்பீட்டில் முசிறி நாமக்கல் சாலை இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) சார்பில், ரூ.104.54 கோடி மதிப்பீட்டில் முசிறி நாமக்கல் சாலை கி.மீ 60/650- வரை இருவழிப் பாதையை பாவுதளத்துடன் கூடிய நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்துதல், சாலை வலுப்படுத்துதல், சாலையின் மேற்பரப்பை மேம்பாடு செய்தல், சிறுபாலங்கள் அகலப்படுத்துதல், கூடுதல் பாலம் கட்டுதல், மிகவும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் மற்றும் திரும்பக் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல் மற்றும் கட்டுமானங்கள் நிறைந்துள்ள பகுதியில் வடிகால் வசதி செய்தல் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூலம் 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 24,000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

தலா 12.55 கி.மீ தொலைவிற்கு மண் அடித்தளம், கீழ் தளகற்கலவை, ஈர கற்கலவை தளம், அடர் தார் கலவை தளம், தார் தள கற்காரை, மைய தடுப்பான் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும், கி.மீ 64/2, கி.மீ 65/128 மற்றும் கி.மீ 67/734 என மொத்தம் 3 சிறு பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் முடிவுற்றுள்ளது. 14 குழாய் பாலங்களை பெட்டி பாலமாக திரும்ப கட்டும் பணி, 14 சிலாப் பாலத்தை அகலப்படுத்தும் பணி, 2,307 மீ நீளத்திற்கு தடுப்பு சுவர் மற்றும் பக்கச்சுவர் அமைக்கும் பணி, 75 மீ நீளத்திற்கு கிணற்று பாதுகாப்பு சுவர், 2,920 மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 31,372 மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகளில் 20,127 மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகளும், 191 மின்கம்பங்கள் மாற்றியமைத்தல் பணிகளில் 142 பணிகளும், 8,500 எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடும் பணிகளில் 6,500 மரக்கன்றுகள் நடும் பணிகளும் முடிவுற்றுள்ளன.

முன்னதாக, நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் உதவி கோட்டப்பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) அருட்செல்வன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அ.தவமணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கே.பி.ராமசந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story