தொழிலாளி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

தொழிலாளி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

கொள்ளை முயற்சி 

சேலத்தில் தொழிலாளி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். மல்லூரில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது வீட்டிற்குள் இருந்து சத்தம் வந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் உள்ள சிலர் அங்கு சென்று பார்த்தனர். வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள் சத்தம் போட்டனர். இதனால் பயந்து போன கொள்ளையர்கள் மேற்கூரை வழியாக ஏறி தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குமரேசனுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடப்பது தெரிந்தது. இது குறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story