நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகம் திறப்பு விழா

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகம் திறப்பு விழா

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை மார்ச் 13 ம் தேதி நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்ட தனியாக பிரிக்கப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கீழ் இதுவரை நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டு வந்தது. சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியைப் பிரித்து, நாமக்கல் மாவட்டத்திற்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. இதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் அனுமதியின்பேரில் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்குவதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பூர்வாங்கப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் இராஜேஸ்குமார் எம்.பியை, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் முதன்மை அமைப்பாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம் சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இராஜேஸ்குமார் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது,

நாமக்கல் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை துவக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக நாமக்கல் மாவட்ட மக்களின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறறோம். இதைத் தொடர்ந்து, நாமக்கல், மோகனூர் ரோடு கந்தசாமி கண்டர் பள்ளி அருகே உள்ள, மத்தியக் கூட்டுறவு வங்கியின் வட்டார அலுவலக வளாகத்தில், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் மார்ச் 13ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு வரவேற்கிறார். சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மீராபாய் முன்னிலை வகிக்கிறார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி அனுமதி பெற்று, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனியாக செயல்படத்துவங்கும். இதன்மூலம் மாவட்ட விவசாயிகள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.

Tags

Next Story