நாமக்கல் முட்டை விலை உயர்வு - கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி..!

நாமக்கல் முட்டை விலை உயர்வு - கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி..!

முட்டை 

நாமக்கல்லில் முட்டை விலை 4 நாட்களில் 50 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 20 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு ( NECC), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒரு வாரமாக முட்டை விலை மாறுதல் இல்லாமல் நீடித்து வந்தது. ஏப்ரல் 29ம் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.15 ஆனது. ஏப்ரல் 30ம் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.20 ஆனது. மே- 1ம் தேதி 20 பைசா உயர்ந்து ரூ. 4.40 ஆனது. இந்த நிலையில் NECC மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மீண்டும் 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை 4 நாட்களில் 50 பைசா உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story