நாமக்கல் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று: தனி வார்டில் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று: தனி வார்டில் சிகிச்சை

நாமக்கல் நகரில், பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது, நாமக்கல் மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பொதுமக்களை மிகவும் வாட்டி எடுத்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், கடந்த சில நாட்களாக, கேரள மாநிலத்தில், உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தனர். தமிழகத்தில், சில இடங்களில் கொரோனா தொற்று பரவலாக சிலருக்கு இருந்து வருகிறது. இருந்தும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாமக்கல் எர்ணாபுரத்தைச் சேர்ந்த, 30 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், நாமக்கல் நகரில் சேலம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்த நிலையில், கொரோனா தொற்றுக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக, இன்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கி உள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தற்போது கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாம் உஷாராக முன்னெச்செரிக்கை நடவடிக்கை இருப்பதே நமக்கு பாதுகாப்பு.

Tags

Next Story