மரகத மேனியாய் அருள்பாலித்த நடராஜர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம். மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளை கொண்டுள்ளது இந்தக் கோயில்.
இலந்தை மரத்தின் அடியில், சுயம்புவாய் தோன்றியவர் மங்களநாதர். இங்குள்ள மங்களநாயகி அம்மன் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவளாக அருள்கிறாள். நடராஜப் பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு.
மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காண முடியும். இங்கோ பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது. இது ஆறு அடி உயரம் உடையது. இந்தச் சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும், திருமேனி மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.
இந்த அபூர்வ தரிசனத்திற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு ஆருத்ரா தரிசனம் விழா டிச. 18ஆம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் இன்று காலை 8 மணிக்கு மரகத நடராஜரின் திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு கலையப்பட்டு, நடராஜர் சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த நடராஜரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி நிகழ்வுகளைக் கண்டு களிக்க எல்இடி டிவி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் சமூக அமைப்புகளின் சார்பில் அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.
இன்று இரவு மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சந்தனம் மீண்டும் சாத்தப்பட்டு ஆருத்ரா தீபாராதனை நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி சுதிர்லால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.