புத்தாண்டு கொண்டாட்டம் : நீலகிரி காவல்துறை எச்சரிக்கை

நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அரசு விதித்துள்ள வழி நெறிமுறைகளை கடைப்பிடிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் சுற்றுலா நகரமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக பெரும்பாலும் நட்சத்திர விடுதிகள், காட்டேஜ்கள், உணவகங்களில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் விடுதிகள் மற்றும் உணவகங்களில் மதுபானங்களை உபயோகம் செய்ய அனுமதி வாங்கியிருந்தவர்கள் மட்டுமே விநியோகிக்க வேண்டும் அனுமதியில்லாமல் மதுபானங்கள் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மதுபானங்கள் விநியோகிக்க கூடாது என தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்க வேண்டும் சமீபத்தில் ஒரு தங்கும் விடுதிக்கு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். சுற்றுலா பயணிகளுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய பாதைள் மற்றும் சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்த கூடாது.

மீறினால் அதற்கு தங்கும் விடுதியே பொறுப்பேற்க்க வேண்டும் என எச்சரித்தார். அதேபோல் கொண்டாட்டங்கள் அரசு அறிவித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் பதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் , நீச்சல் குளங்கள் இருந்தால் ஆறு மணிக்கு மேல் அனுமதிக்க கூடாது.

இதை விடுதி காட்டேஜ் உணவக உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். மேலும் அதேபோல் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது இதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்படுகிறது.

எனவே விடுதிகள் உணவகங்கள் காட்டேஜ்களில் சிசிடிவி கேமராக்கள் வைப்பதை கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவர் இந்த அரசு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story