இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் போது காவல் துறையினர் அவர்களை கவனமாக கையாள வேண்டும், விசாரணையில் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் போது காவல் துறையினர் அவர்களை கவனமாக கையாள வேண்டும், விசாரணையில் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து ‘குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான (Child Welfare Police Officer) திறன் வளர்ப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பாட்டாலே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்ந்து ‘மாற்றத்ததை தேடி’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் போது அவர்களை கவனமாக கையாள வேண்டும், காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல்துறையினர் எடுக்க வேண்டும். காவல்துறையினராகிய நீங்கள் இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் இதுசம்மந்தமாக குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைதுறைக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் மாவட்ட காவல்துறை வழங்கும் என்றும் கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் IV நீதிமன்ற நீதிபதி குபேரசுந்தர், சமூகப்பணி உறுப்பினர் உமாதேவி, குழந்தைகள் நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், தூத்துக்குடி நலக்குழு உறுப்பினர் சித்திக்ரம்சான், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் அலெக்ஸ், ஜேம்ஸ் அதிசயராஜா ஆகியோர் மாவட்ட காவல்துறையினருக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், கல்வியினை ஊக்குவித்தல், படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் கல்வி பயிலவும், ஊக்குவித்து உதவுவது குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
Next Story