தூத்துக்குடி பாத்திர வியாபாரி கொலை வழக்கில் மூன்று பேர் கைது: குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றபோது கை, கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மறவன்மடத்தைச் சேர்ந்தவர் பாத்திர வியாபாரி முருகன், 34. இவர், நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து, புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முருகன் கொலை தொடர்பாக ராஜகோபால் நகரைச் சேர்ந்த மாரிதங்கம், 24, பிரகாஷ் நகரைச் சேர்ந்த மாதேஸ்வரன் 24, வினீத் 24, ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களை கைது செய்ய முயன்றபோது, மாரிதங்கமும், மாதேஸ்வரனும் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதில், மாரிதங்கத்திற்கு வலது கையிலும், மாதேஸ்வரனுக்கு வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதான மாரிதங்கம், மாதேஸ்வரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு முருகன் மாரிதங்கத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story