காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புதிய திராவிடர் கழகத்தின் சார்பில் ஐம்பெரும்விழா!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள நத்தக்காடையூரில் புதிய திராவிடர் கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐம்பெரும்விழா நடைபெற்றது.

ஐம்பெரும்விழாவாக முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் மாண்புமிகு. கு.காமராஜர் ஐயா அவர்களின் படத் திறப்பு விழா. மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி கொடி காத்த குமரன் திருப்பூர் குமரன் படத்திறப்பு விழா, புதிய திராவிட கழகத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக விழா, சுதந்திரப் போராட்ட வீரன், கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் ஐயா அவர்களின் படத் திறப்புவிழா, கொல்லிமலையை ஆண்ட வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரி படத்திறப்பு விழா, சுதந்திரப் போராட்ட வீரன் மாவீரன் பொல்லான் படத்திறப்புவிழா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

கொங்கு தளபதி, கே.எஸ்.ராஜ்கவுண்டர் அவர்கள் தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் இரா.இம்மானுவேல் நாடார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக; சத்ரிய சான்றோர்படை நிறுவன தலைவர் ஹரிநாடார், சதா நாடார். பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் ராமன், வீரசைவ பேரவை அமைப்பு தலைவர் தங்க தமிழ்செல்வன், பொன்.விஸ்வநாதன் நாடார் மற்றும் பல்வேறு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாடார் சமுதாய பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியுடன் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடைபெற்றது. ஐம்பெரும் விழாவில் 500 பெண்கள் உட்பட புதிய திராவிட கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஐம்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானங்கள்

கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களுக்கு கோவையில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்துத் தர வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர் குணாளன் நாடார் அவர்களுக்கு திருப்பூர், செல்லாம்பாளையத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த மார்ச்-26 2021 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைத்துத் தரப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. அதற்கான வேலையை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்ட தியாகி கொடி காத்த குமரன் அவர்களுக்கு திருப்பூரில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்துத் தரப்பட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

சுதந்திரப் போராட்ட மாவீரன் பொல்லான் அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்துத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

ஜேடர்பாளையத்தில் அணைகட்டி கொங்கில் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கிய அல்லாள இளைய நாயக்கருக்கு தை முதல் நாளை பிறந்தநாள் விழாவாக அனுசரித்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாண்புமிகு சின்னவர் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அதனடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அனைத்து மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை தமிழக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags

Next Story