அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012- ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 23 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

அவர்களில் 19 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோபிநாத் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆகிய 5 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் நேற்று அரசு தரப்பு 24-வது சாட்சியாக ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான ராமசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது அவர், உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன்பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன், எனக்கும் இவ்வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, தனக்கு எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். இந்த சாட்சியத்தை பதிவு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story