மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

தேரோட்டம்

ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவில் திருவிழா முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 15ஆம் தேதி இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. கணபதி ஹோமம், நவகலச பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பூரதம் புறப்பாடுடன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. 18ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அம்மன் பாலிக்கிறார். முக்கியமாக ஆதிபராசக்தி, துர்க்கை, கொடுங்களூர் அம்மன், ராஜகாளியம்மன், ஹெத்தையம்மன், மகா மாரியம்மன் உள்பட பல்வேறு அலங்காரத்துடன் வாகனங்களில் எழுந்தருளுகிறார். இந்த நிலையில் நேற்று மாலை முதல் நாள் தேரோட்டம் ஒக்கலிகர் சமுதாயம் சார்பில் தொடங்கியது. தேரோட்டம், மெயின் பஜார் மின்வாரிய ரவுண்டானா ஐந்து லந்தர் பகுதி வழியாக மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற ஏப்ரல் 12ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16ம் தேதி மதியம் 1.55 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 8 மணிக்கு பட்டு பரிவட்டம் சாத்துப்படி, 8.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு சிறப்பு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக தினசரி கோவில் நடை காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு சாத்தப்பட உள்ளது.

Tags

Next Story