விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சீனந்தோப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நாராயண செல்வன் (29). சென்ட்ரிங் தொழில் செய்துவந்தாா். இவா், 15.10.2020இல் காயல்பட்டினம்-ஆறுமுகனேரி சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது மனைவி லட்சுமி சுதா, மகள் மகிஷா, தந்தை மாரியப்பன், தாய் நாகஜோதி மற்றும் சகோதரிகள் ரூ.75 லட்சம் இழப்பீடு கோரி, திருநெல்வேலி 4ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தூத்துக்குடி வழக்குரைஞா் வி.ரவீந்திரன் மூலம் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை நீதிபதி திருமகள் விசாரித்து, நாராயண செல்வன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.30 லட்சத்து 51 ஆயிரத்து 760, ஏழரை சதவீத வட்டி மற்றும் செலவுத் தொகையை வழங்குமாறு, விபத்துக்குள்ளான லாரியின் காப்பீட்டுக் கழகத்துக்கு உத்தரவிட்டாா்.