கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

அழகிரிநாத பெருமாள்
சேலம் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற அழகிரிநாத பெருமாள் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிக சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது. அதன்படி மாலை 5 மணிக்கு அழகிரிநாத சாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம் நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது.
சொர்க்கவாசல் திறப்பு பகல் பத்து உற்சவ முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியுடன், அழகிரிநாதர் நீள்முடி கிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 23-ந்தேதி காலை 5 மணிக்கு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. அன்றைய தினம் பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு தங்க கவசம் சாத்துப்படி நடக்கிறது. பின்னர் அன்று இரவு ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன், செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர்கள் சுந்தரகோபால், சுரேஷ்பாபு, அறிவழகன், குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
