சாலை,கழிவு நீர் கால்வாய் வசதியின்றி பழனியப்பன் நகர்

சாலை,கழிவு நீர் கால்வாய் வசதியின்றி பழனியப்பன் நகர்

சாலை,கழிவு நீர் கால்வாய் வசதியின்றி பழனியப்பன் நகர்

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை

புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழனியப்பா நகர், குண்டும் குழியுமான சாலைகள், கழிவுநீர்க் கால்வாய்வசதி இல்லாமல் காணப்படுகிறது. பழைமையான புதுக்கோட்டை நகருக்கு அருகே 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது பழனியப்பா நகர். திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் பகுதியில் திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு எதிரே இந்தக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு இரு பிரதான சாலைகளும், 6 குறுக்குச் சாலைகளும் உள்ளன. சுமார் 200 வீடுகளைக் கொண்ட இந்த விரிவாக்கக் குடியிருப்பில் தொடக்கக் காலத்தில் போடப்பட்ட சாலைகள், சீரமைக்கப்படாமல் உள்ளன.

எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளன.மேலும், இந்த வீதிகள் எங்கும் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், தெருக்களின் ஓரத்தில் சிறிய குளத்தைப் போல கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், நகர் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் பெருகி சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து பழனியப்பா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் சத்தியராம் ராமுக்கண்ணு கூறியது: எங்கள் பகுதியில் பெரும்பாலும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள்தான் இருக்கிறோம். 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியைச் சேர்ந்த இந்தப் பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும், கழிவுநீர்க் கால்வாய் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பல முறை ஆட்சியர் அலுவலகத்திலும், எம்எல்ஏ அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.மாவட்ட நிர்வாகமும், ஊரக வளர்ச்சித் துறையும் சிறப்புக் கவனம் செலுத்தி சாலையும், கூடவே கழிவுநீர்க்கால்வாயும் அமைத்துத் தர வேண்டும் என்றார்.

Tags

Next Story