விதிகளை மீறி இயக்கப்பட்ட1,419 வாகனங்களுக்கு அபராதம்

விதிகளை மீறி இயக்கப்பட்ட1,419 வாகனங்களுக்கு அபராதம்

பைல் படம் 

சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,419 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த வாகன ஆய்வாளர்கள் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் விதிமுறைகளை மீறி வரும் வாகனங்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி சேலம் சரகத்தில் கடந்த மாதம் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி செல்லுதல், அதிவேகமாக ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,419 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி கடந்த மாதம் (ஜனவரி) சேலம் சரகத்திற்குட்ட பல இடங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. அதில் அதிவேகமாக வாகன ஓட்டிய 228 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 37 பேர், ஹெல்மெட் அணியாமல் ஓட்டிய 62 பேர், அதிக பாரம் ஏற்றி சென்ற 100 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,419 வாகன ஓட்டிகள் சிக்கினர். அவர்களுக்கு ரூ.56 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

Tags

Next Story