சாலையில் கொட்டி கிடந்த மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள் !
![சாலையில் கொட்டி கிடந்த மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள் ! சாலையில் கொட்டி கிடந்த மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள் !](https://king24x7.com/h-upload/2024/07/03/570315-people-who-took-the-fish.webp)
மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்
சென்னை காவாங்கரையில் இருந்து கேரளாவுக்கு, நேற்று மாலை மீன்கள்ஏற்றிய 'அசோக் லேலண்ட் தோஸ்த்' சரக்கு வாகனம், ஜி.எஸ்.டி., சாலையில் சென்றது. சரக்கு வாகனத்தை, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த சதிஷ், 28, என்பவர் இயக்கினார். மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை சென்ற போது, வாகனத்தின் முன் வலது பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்,சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில், மீன்கள் முழுதும் சாலையில் சிதறி கொட்டின.
இதையடுத்து, செங்கல்பட்டு மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், கிரேன் இயந்திரம் வாயிலாக சரக்கு வாகனத்தை மீட்டு, போக்கு வரத்து நெரிசலை சரி செய்தனர். நல்வாய்ப்பாக, டிரைவர் சதீஷ் காயமின்றி தப்பினார். சாலை முழுதும் மீன்கள் கொட்டிக் கிடந்ததை கண்ட அப்பகுதிவாசிகள் மற்றும் சக வாகன ஓட்டிகள் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.