பேராவூரணி தபால் நிலைய வாசலில் ஆபத்தான தண்ணீர் தொட்டியால் மக்கள் அச்சம்

தபால் நிலைய வாசலில், ஆபத்தான நிலையில் உள்ள தரைத்தள தண்ணீர் தொட்டியை மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பட்டுக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மாடியில் பேராவூரணி தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்திற்கு தபால், வங்கி சேவை, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த தபால் நிலையம் செல்லும் மாடிப்படி அருகே வலதுபுறத்தில், தரையோடு அமைந்த தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி முறையாக, பாதுகாப்புடன் மூடப்படாமல் அரைகுறையாக திறந்த நிலையில் உள்ளது. தபால் நிலையத்திற்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் சிறிது கவனம் பிசகினாலும் குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. அண்மையில் பள்ளிச் சிறுவன் ஒருவன் இங்கு தவறி விழுந்து உதடு காயம் ஏற்பட்டது. எனவே, தபால் நிலையம் வரும் பெற்றோர்கள், குழந்தைகள் நலன் கருதி தரைத்தளத்தில் உள்ள குடிநீர் தொட்டியை பாதுகாப்பான முறையில் மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story