செங்கல்பட்டு அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம்
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம்
செங்கல்பட்டு அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் சுற்றுவட்டார கிராமத்தினருக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இங்கு நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றாற்போல பயிரிடப்படுகிறது. சித்தாமூர் அருகே உள்ள பெருக்கரணை கிராமத்தில் பெரிய ஏரி நடுமதகு பகுதியில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் தலையில் முட்டும் அளவிற்கு தாழ்ந்து செல்கிறது.

இதனால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும், அந்த வழியாக நடந்து செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். வயல்வெளியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய நிலத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story