வெள்ளத்தில் உதவிய மக்கள் - நன்றி செலுத்திய ரயில்வே

வெள்ளத்தில் உதவிய மக்கள் - நன்றி செலுத்திய ரயில்வே

பாலக்காடு எக்ஸ்பிரஸ் 

மழை வெள்ளத்தின்போது, பயணிகளுக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் சோதனை முறையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ரயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் புதுக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை கொண்டு வந்து உணவு அளித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தென்னக ரயில்வே மேலாளரிடம் தங்களது பகுதி வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது எனவும், இந்த ரயிலை ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் சோதனை முறையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வரும் நேற்று முன்தினம் முதல் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி வரை அதாவது 3 மாத காலத்திற்கு சோதனை முறையில் இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் மக்களின் நற்செயலை பாராட்டி நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரயில்வே எடுத்த இந்த முடிவு ஸ்ரீவைகுண்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story