தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது

தமிழகம் முழுவதும்  பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது

காவல்துறை விசாரணை


தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது... கொள்ளையடித்த நகையை விற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஸ்பின்னிங் மில் வாங்கியது அம்பலம்.... முக்கிய குற்றவாளியான மூர்த்தியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 150 பவுன் தங்க நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் உள்ள வீட்டில் புகுந்து அங்கு உள்ளவர்களை கட்டி போட்டு 56 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அருண்குமார் இருவரையும் விசாரித்த போலீசார் அவர்களிடம் இருந்து முகமூடி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்ட போது தெற்கு ஆண்டாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து குற்றப் பிரிவு போலீஸ் சார் விசாரணையை தீவிர படுத்திய போது தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இக்கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. பிடிபட்ட இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மூர்த்தியின் தாய் சீனித்தாய், மனைவி அனிதாபிரியா, லட்சுமி, மகாலட்சுமி, நாகஜோதி, மோகன் உள்ளிட்ட 6 பேர்களை கைது செய்த இராஜபாளையம் போலீசார் கைது செய்த நபர்களிடமிருந்து சுமார் 150 பவுன் தங்க நகைகள் 2 1/2 லட்சம் ரூபாய், லேப்டாப் கம்ப்யூட்டர், டேப்லட், கைபேசி உள்ளிட்ட 84 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளை அடித்த நகைகளை விற்று அதன் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு சுமார் 4 கோடி ரூபாய்க்கு கொள்ளையன் இராஜபாளையத்தில் ஒரு ஸ்பின்னிங் மில் வாங்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இக்கொள்ளை சம்பவங்களில் தனி ஒரு மனிதனாக செயல்பட்டு நகைகளை கொள்ளை அடித்து வந்த மூர்த்தி என்ற நபர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் என்றும் தற்போது மதுரை கருப்பாயூரணி பகுதியில் வசித்து வருவதாகவும் கோவை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்கு மூர்த்தி தான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. சிக்கிய குற்றவாளிகள் 6 பேரும் மூர்த்திக்கு நகைகளை விற்றுக்கொடுப்பது மற்றும் துப்பு சொல்லும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவங்களுக்கு உதவியாக இருந்த 6 பேரை கைது செய்த இராஜபாளையம் போலீசார் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் தன்னை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மூர்த்தி செல்போனை பயன்படுத்தியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கொள்ளையில் ஈடுபட்டு அக்கொள்ளை பணத்தின் மூலம் ஸ்பின்னிங் மில் ஒன்றை வாங்கி அதை நடத்தி வருவது போலீசாருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story