அடிப்படை வசதி கேட்டு அரசுபேருந்தை சிறைபிடித்த மக்கள்



பேருந்தை மறித்த மக்கள்
நீலகிரி மாவட்டம் உதகை 1-வது வார்டுகுட்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக சீரமைக்கப்படாத நிலையில் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட எவ்வித வசதிகளையும் செயப்பட வில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
மேலும் இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள், முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குளிச்சோலை பகுதிக்கு செல்லும் சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி என்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த புதுமந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது நகர மன்ற உறுப்பினர் உடனடியாக இங்கு வர வேண்டும் எனவும் இல்லையென்றால் பேருந்தை விடுவிப்பதில்லை என கிராம மக்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



