ஏரிக்கரை சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்க மக்கள் கோரிக்கை!

ஏரிக்கரை சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்க மக்கள் கோரிக்கை!

இரும்பு தடுப்பு

பனப்பாக்கத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக செல்லும் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் பொய்கைநல்லூர் செல்லும் சாலை உள்ளது. இதன் வழியாக பஸ், லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள், ஆட்டோ என தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது.

மேலும் பனப்பாக்கத்தில் இருந்து இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள், சைக்கிள், கார் ஆகிய வாகனங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தனியார் நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு சென்று வருகின்றனர். களத்தூர், சங்கரம்பாடி, பெரும்புலிபாக்கம், அவளுர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஆதார் கார்டு, பிறப்பு, இறப்பு, வருவாய், சாதி சன்றிதழ் பெற நெமிலியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கும், சார் பதிவாளர் அலுவலகம், அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் செல்வதற்கு இந்த சாலை பயன்படுகிறது.

ஏரிக்கரை மீது செல்லும் சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் இல்லாமல் உள்ளது. இதனால் பெரும் அச்சத்துடன் வாகன ஓட்டிகள் தினமும் செல்கின்றனர். குறிப்பாக இந்த சாலையின் வழியாக இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் பணி முடித்து பணியாளர்கள் இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.

மழைக்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. எனவே, ஏரிக்கரை சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story