மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  - ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

 குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் வழங்கினார்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்த தானம் வழங்கிய 24 கொடையாளர்களுக்கும், 27 முகாம் அமைப்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10,300/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் பார்வையிட்டார். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பாலாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story