மாற்றுத்திறனாளிகள் தகவல்களை முழுமையாக வழங்க வேண்டும்: ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவலில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் சமூக தரவுகள் பதிவு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 33 மாவட்டங்களில் நவம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் சமூக தரவுகள் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரம்பலுார் மாவட்டத்தில் 11,937 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்புறவாழ்வாதார இயக்க களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. இதுவரை 9,969 மாற்றுத்திறனாளிகளிடம் கணக்கெடுப்பு நடைபெற்று உள்ளது.
பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
