அதிராம்பட்டினம் கடற்கரையில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

அதிராம்பட்டினம் கடற்கரையில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள்
அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கவும், அதனால் ஏற்படும் பிரச்னைகளை குறைக்கவும் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் நீர்நிலைகள், சாக்கடை கால்வாய்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவு பொருட்கள் மிதப்பதுடன், அடைப்பும் ஏற்படுகிறது.

அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரை ஓரங்களில் உப்பு உற்பத்தி செய்யும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வாய்க்காலில் வரும் கடல் நீர் மாசுபடுகிறது. அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டுக்கு பறவை இனங்கள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்து வான் வழியே பறந்து வருகின்றன. இவை நாடு விட்டு நாடு பறக்கும் போது கடல் வழியை கடந்து வருகிறது.

அப்போது பறவைகள் உணவை எடுக்கும் போது தவறுதலாக கடல் கழிவுகளை உட். கொள்கின்றன. இந்த நிகழ்வே இப்போது பறவைகளுக்கு அழிவாகவும் மாறியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவற்றை சேகரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார அதிகாரிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொண்டு வந்தால் பரிசு அளிக்கப்படும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரமாவதை தடுக்க முடியும் என்று கூறினர்.

Tags

Next Story