பா.ம.க.வினர் காஞ்சியில் முகாம் - பா.ஜ.க வேட்பாளருக்கு சிக்கல்

பா.ம.க.வினர் காஞ்சியில் முகாம் - பா.ஜ.க வேட்பாளருக்கு சிக்கல்

பொன் பாலகணபதி

திருவள்ளூர் தொகுதி பா.ம.க., பிரமுகர்கள் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்றுவிட்டதால் பாஜகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி ஆதரவுடன் பா.ஜ., வேட்பாளராக பொன் பாலகணபதி போட்டியிடுகிறார். இவர் கடந்த, 25ல் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அம்பத்துார் சேகர், கும்மிடிப்பூண்டி பிரகாஷ் உள்ளிட்ட பா.ம.க., பிரமுகர்கள் மட்டுமே உடனிருந்தனர். திருவள்ளூர் பகுதியில் பிரபலமாக உள்ள மாநில பொறுப்பில் உள்ள பாலயோகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

பாலயோகியின் ஆதரவாளரான கடம்பத்துார் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசனின் மனைவி ஜோதி, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவாக திருவள்ளூருக்கு பிரசாரத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தவிர, திருவள்ளூர் மாவட்ட பா.ம.க.,வின் முக்கிய நிர்வாகிகளும், காஞ்சிபுரம் பகுதிக்கு சென்று ஜோதிக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், திருவள்ளூர் தொகுதியில் பா.ம.க., பிரமுகர்களின் ஆதரவு இன்றி, அக்கட்சியின் குறைந்த அளவிலான தொண்டர்களே, பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். தற்போது, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வரும், பா.ஜ., வேட்பாளர் பொன் பாலகணபதி, இன்னும் சில நாட்களில் திருவள்ளூரில் பிரசாரத்தை துவக்க உள்ளார். அப்போதாவது, திருவள்ளூர் பகுதியில் செல்வாக்காக உள்ள பா.ம.க., பிரமுகர்கள் வருவரா அல்லது, தங்கள் கட்சி வேட்பாளருக்காக காஞ்சியிலேயே முகாமிடுவரா என தெரியாமல், பா.ஜ.,வினர் குழப்பத்தில் உள்ளனர்

Tags

Next Story